கண்ணன் வீட்டுக்குள் நுழைந்ததுமே, தீபா தன் பேச்சைத் தொடங்கினாள்.
"என்னங்க, நம்மவீட்டுக்குப் பக்கத்தில இருக்காங்கள்ல"
"யாரு? என கண்ணன் கேட்க, "அதாங்க உங்ககூட ஒன்னா வேலை பாக்குறாரே குமார்."
"ஆமா, இப்போ அவருக்கு என்ன?"
"இல்லங்க, அவரு வீட்டுக்கு இன்னைக்குப் புதுசா காரு
வந்துச்சு.
"சரி, அதுக்கென்ன யாராவது சொந்தகாரங்க வந்திருப்பாங்க."
"அட, இல்லைங்க அவுங்க புதுசா வாங்கியிருக்காங்களாம்!"
"உனக்கு எப்படி தெரியும்?"
"அவுங்க மனைவி லீலா வந்து, என்னைக் கூட்டிட்டுப் போய்க் காட்டுனாங்க. அதுமட்டுமில்லங்க, வீட்டுக்குப் புதுசா எல்லா electronics பொருட்களும் வாங்கியிருக்காங்க!"
"சரி, இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்ற?
"ஒன்னுமில்லைங்க, நம்ம வீட்டுல ரொம்ப நாளா துணி துவைக்கிற
வாஷிங் மெஷின் சிக்கல் செய்யுது, அத மாத்திட்டுப் புதுசா ஒன்னும்
வாங்கலாம்ங்க.
"தீபா, நீ சொல்றது எனக்குப் புரியுது. ஆனா, வாங்குற 25000 ரூபாய் சம்பளத்தில 10000 ரூபாய் வீடு கட்ட வாங்கின கடனுக்குப்
போயிடுது. அப்புறம் வீட்டுச் செலவு, பிள்ள படிப்புனு காசு செலவாகிடுது. கொஞ்ச நாள் பொறுமையா இரு. தீபாவளிக்கு போனஸ் தருவாங்க, அதில வேற செலவு இல்லைன்னா வாங்குவோம்" எனச் சொல்லி முடிப்பதற்குள் தீபா, "இந்த வீட்டுல நாம பேச்ச யாரு மதிக்கிறா?" என்று முனுமுனுத்துக் கொண்டே அடுப்படிக்குச்
சென்றிருந்தாள்.
கண்ணனுக்கும் தெரியும், இதுபோல தீபா பல முறை வாஷிங்மெஷின், தொலைக்காட்சி, கைப்பேசி என்று கேட்டிருக்கிறாள். ஆனால், வாங்கி தரமுடியாது எனச் சொல்லாமல், நாளாகட்டும் என்பதே பதிலாக இருந்தது. இன்றும் அதே பதில்தான். ஆனால், இந்த முறை தீபா கோவமடைந்தது, கண்ணனுக்கு முதல் முறையாக வருத்தத்தைக்
கொடுத்தது, அப்படியே சாய்வு நாற்காலியில் கண்ணயர்ந்த
நேரத்தில் வந்த தீபா, "வாங்கசாப்பிடலாம்" எனக்கூற, "மதன்எங்க?" என்றுகேட்டான்கண்ணன்.
"அவன் அப்பயே சாப்பிட்டு தூங்கிட்டான்."
"சரி, எடுத்துவை" என்று சொல்லிக் கண்ணனும், தீபாவும் இரவு உணவை முடித்து உறங்கச் சென்றபொழுது, மீண்டும் தீபா, தன்பேச்சை எடுக்க, காதில் வாங்காதவாறு கண்ணன் திரும்பி படுத்ததும், மீண்டும் சிறு முனுமுனுப்பலோடு தீபாவும்
கண்ணயர்ந்தாள்.
விடிந்ததும் பரபரப்பு தொற்றிக்
கொள்ள, மதனைப் பள்ளிக்குக் கிளப்பியும், கண்ணனுக்கு உணவு எடுத்து வைத்தும், பம்பரமாய்ச் சுழன்றுக் கொண்டிருந்தாள் தீபா. கண்ணன் அலுவலகத்திற்குக் கிளம்பும் எல்லா
நாட்களும் வாசல்வரை வந்து வழியனுப்புபவள், இன்று
தலையைமட்டும் அசைத்து விடைகொடுக்க, தன்மகனை அழைத்துக்கொண்டு, தானும் கிளம்பினான் கண்ணன். மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு, சரியாக 9.30 மணிக்கு அலுவலகத்தில் நுழைய, உதவியாளர், "வணக்கம்!" எனச் சொல்ல, சிரித்து கொண்டே வணக்கம் சொல்லி தனது இருக்கையில்
அமர்ந்தான். அங்கு, கண்ணனைத் தவிர யாருமில்லை. ஏனென்றால், அரசு அலுவலகம்என்பதால், எல்லோரும் தாமதமாகவே வருவார்கள். ஆனால், கண்ணன் மட்டுமே மழையானாலும், வெயிலானாலும் சரியாக வந்துவிடுவான்.
****
சிலநாட்களுக்கு முன்...
அன்றும் அதுபோல அமைதியாகவே தொடங்கியது. மணி 12 ஐ தொட்டபோது சக்திவேலு பொறியாளரைப் பார்க்க
அலுவலகத்தில் நுழையவும் எல்லோரும் வணக்கம் சொல்லி அமர்ந்தனர். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் "யாருஇவரு?" எனப் பக்கத்தில இருக்கிறவர்கிட்ட கேட்க, இவருதான் சக்திவேலு" என்று சொல்லத் தொடங்கியவர், குரலைத் தாழ்த்தி "அண்ணாச்சி" என்றார். அதே சன்னமான குரலில், "முன்னாடி கட்டப் பஞ்சாயத்து, வட்டி தொழிலிலு செஞ்சுகிட்டு இருந்தவரு, இப்ப அதெல்லாம் விட்டுட்டு பெரிய பெரிய
அடுக்குமாடிக் கட்டிடம் கட்டி விக்க தொடங்கிட்டாரு. அப்பேலிருந்தே அவர அண்ணாச்சினு கூப்பிட்டனால
இப்பவும் அதே தொடருது"
என்றுமுடித்தார். பொறியாளர் அறையிலிருந்து அழைப்புமணி ஒலிக்க, உதவியாளர் நுழைந்தவுடனே வெளியேறி, நேராக உதவிப் பொறியாளர் கண்ணனை அழைக்கச்
சென்றார்.
கண்ணன் அறைக்குள் நுழைந்து குமாருக்கு வணக்கம் வைக்க எதிரே கால் மேல் கால் போட்டு சக்திவேலு
அமர்ந்திருந்தார்.
குமார் சற்று செருமிய
குரலுடன், இவர் பேரு சக்திவேலு கட்டிடத் தொழில்
செய்யாரு. நம்ம வேப்பங்குளம் பக்கத்தில புதிய
கட்டிடம் கட்டுறதுக்கு ஒப்புதல் வாங்க வந்திருக்காரு. பாத்துசெஞ்சுகுடுங்க."
கண்ணன், "உடனே இடத்தோட வரைப்படம், மூலபத்திரம், பட்டா வில்லங்கச்சான்று, உங்களோடு அடையாள அட்டைக் கொடுத்தீங்கனா, சரிபார்த்துட்டு கொடுத்திடுறேன் அப்படின்னு ஏற்கனவே உங்க ஆளுங்ககிட்ட சொல்லி
அனுப்பிட்டேனே"
என்றுசொன்னார்.
"என்ன பொறியாளரே! நீங்க எதுவும் சொல்லலையா?" என அண்ணாச்சி சிரித்துக் கொண்டே கூற, உடனே குமார், "அதான் நான் சொல்லிட்டேன்ல, ஒப்புதல்னு போட்டு கொண்டுவாங்க, கண்ணன்." என்றார்.
"இல்லை, அதுதப்புங்க" என்று கண்ணன் சொல்ல, வேறு வழியில்லாத குமார், "சரி நீங்க போங்க" என்று அனுப்பிவிட்டான்.
கண்ணன் போனதும் சக்திவேலுவிடம், "இந்தாளு இப்படிதாங்க நேர்மை, நீதின்னு சொல்லிட்டு இருப்பாராம். இவர் இந்நேரம் பொறியாளராகியிருக்க வேண்டியது, யாருக்கும் வளைஞ்சு கொடுக்காதனால பதவி உயர்வுதராம
வச்சிருக்காங்க, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க
நாளைக்கு அந்தாளு விடுப்பு கொடுத்திருக்காரு, நானே கையெழுத்து போட்டு கொடுத்திடுறேன். அப்புறம், நான்கேட்டதெல்லாம்..." என்று இழுக்க, "இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுல எல்லாம்
இருக்கும்" என்று சக்திவேலு கிளம்பிச் சென்றுவிட்டார்.
****
இன்று
10 மணியானதும் ஒவ்வொருத்தராக நுழைய அலுவலகம் களைகட்டத் தொடங்கியது. அவர்கள் பேச்சு முழுக்க, குமார் வாங்கிய புதுகாரைப் பற்றியே இருந்தது. அதில், சிலர் வெளிப்படையாகவே 'நேர்மையா உழைச்சா வாங்க முடியுமா?' என்று மனக் குமுறலையும் கொட்டினர்.
"அண்ணாச்சி, அந்த வேப்பங்குளம் இடத்தில அடுக்குமாடிக் குடியிருப்பு
கட்ட அனுமதி கேட்டப்ப, நம்ம கண்ணன் துணைப் பொறியாளர் இருக்காரே, பயணச் செலவுன்னு கணக்கு காட்டினா கூட எங்கு
போனீங்க? என்ன வேலை? அப்படின்னு கேட்பாரு, சும்மா கையெழுத்து போடச்சொன்னா போட்டுருவாரா? அதான், குமார் பொறியாளர் என்பதால் அண்ணாச்சியுடன்
ஏதோ பேசி, கண்ணனுக்கு விடுமுறைக் கொடுத்து, அங்கு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தாருல்ல, அதுக்குப் பரிசாதான் இந்த புது வண்டி" என்று புறணியளக்க, குமாரின் வருகையைப் பார்த்த பின்பு பேசாமல்
அமர்ந்து கொண்டனர்.
குமார் தனது பெயர்
பொறித்த அறையில் சென்று அமர்ந்தார்.
அமைதியாகச் சென்று கொண்டிருந்த
நேரத்தில், தீடீரென்று ஊழல் ஒழிப்பு அதிகாரிகள்
நுழைய எல்லோரும் விக்கித்து நின்றனர். அதில்
ஒருவர் யாரும் வெளியே போகக்கூடாது, தொலைபேசி எல்லாம் அணைச்சு வச்சுருங்க, என்று சொல்லிவிட்டு "Engineer இருக்காரா?" என்று கேட்டதிற்கு, இருக்காரு என்று ஒட்டுமொத்த ஊழியரும் சொல்ல, குமாரின் அறைக்குள் 3 பேர்நுழைந்தனர். அதேநேரம், "Assistant Engineer யாரு? எங்க இருக்காரு? அவரையும் வரச்சொல்லுங்க" என்றதும், கண்ணனும் எழுந்து அறைக்குள் சென்றார்.
"நாங்க, ஊழல் ஒழிப்பு துறையில இருந்து வரோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேப்பங்குளம் இடத்துக்கு, நீங்க கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தீங்களா?" என்றதும், சிறிதும் யோசிக்காத கண்ணன், "இல்லை! அவுங்க சான்றுகள் சரியில்லைனு அனுப்பிட்டேன்" என்றார்.
"அப்டியா?" எனச் சிரித்துக்கொண்டே, தனது உதவியாளரிடம் "அந்த கோப்புகாட்டுங்க" என்றார். அதைப் படித்து பார்த்த கண்ணனுக்கு அதிர்ச்சியாக
இருந்தது.
"ஐயா, அன்னைக்கு சக்திவேலு வந்து கேட்டதுக்கு, நான் முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன், இது நான் ஒப்புதல் தரவே இல்லை." என்றார் கண்ணன். ஊழல்
ஒழிப்பு அதிகாரி குமாரைப் பார்க்க,
தலைக்குனிந்து அமர்ந்திருந்தான்
குமார்.
"சரி, நீங்க வெளியே காத்திருங்க" என்று கண்ணனை அனுப்பிவிட்டனர்.
"இப்பவாவது சொல்லுங்க குமார், ஏன் நீங்க கண்ணனுக்குத் தெரியாம அவருக்கு
விடுமுறை கொடுத்து இப்படி செய்தீங்க? ஏற்கனவே, நீங்க வேலை செய்த ஊர்களிலையும், இதேபோல செய்திருக்கீங்கனு புகார் வந்துகிட்டேதான்
இருந்தது. அதுனால, உங்களுக்கு தெரியாமலேயே நாங்க உங்களக் கண்காணிச்சுகிட்டேதான்
இருந்தோம். நேத்து, உங்க வீட்டுக்குப் புதிய பொருட்களும், காரும் வந்திறங்கியது முதல் எங்களுக்குத் தெரியும்" என்று சொன்னதும், குமாருக்கு வேர்க்கத் தொடங்கியது. இதற்கு மேலும் மறைக்கமுடியாதுனு தெரிஞ்சதுக்கப்புறம்
நடிக்கிற பயனில்லை என்று உணர்ந்து குமார் தலைநிமிராமலேயே, 'நான் பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்தேன். கண்ணன் நேர்மையான ஆளு, நான் கையெழுத்து போடசொன்னப்போ அவருபோடல, அதான் அவரை விடுப்புல அனுப்பிட்டு நானே
ஒப்புதல் கொடுத்திட்டேன்'
எனச் சொன்னான்.
"குற்றத்தை நீங்களே ஒத்துக்கிட்டனால, எங்க வேலை எளிமையா முடிந்தது, சரி வாங்க போலாம்" என்று குமாரையும் அழைத்துச் செல்ல முற்பட்டபொழுது, கண்ணனைப் பார்த்துக் கொண்டே குற்றவுணர்வுடன்
சென்றான் குமார். எல்லோரும், என்ன நடக்குதுன்னு புரியாமல் நின்றனர். அன்று முழுவதும் அதே பேச்சாகக் கழிந்தது.
வழக்கம் போல வீட்டுக்கு வந்த கண்ணனைப் பார்த்து, "என்னங்க!" என்று தீபா தொடங்க, இன்று எதைச் சொல்ல போறாளோ? என்று யோசித்துவிட்டு "என்னம்மா" என்றார் கண்ணன்.
"உங்ககூட வேலை பாக்குறாரே குமார், அவர இன்னைக்கு ஊழல்வழக்குல உள்ள போட்டுட்டாங்களாம்."
"அது! உனக்கு எப்படி தெரியும்?" என்று கண்ணன் கேட்க, "உள்ளுர் தொலைக்காட்சி செய்தில ஒன்னுவிடாம
எல்லாத்தையும் சொன்னாங்கங்க.
அந்த பணத்திலதான், எல்லாப் பொருளும், காரும் உட்பட வாங்கியிருக்காங்களாம். இதுபோக, கணக்குலவராத 10 லட்சம் பணமும் பறிமுதல் பண்ணிருங்காங்களாம். காருவாங்கினப்போ மட்டும் அந்த லீலா அப்டி
பேசினாளே, இப்பபாருங்க, வீட்டுக்குள்ளேயே அடைஞ்சிருக்கா. நீங்க சொன்னப்ப புரியல, எனக்கு இப்போதாங்க புரியுது. நாம மட்டும் நீதி, நேர்மையிருந்தா எல்லாம் சரியாகிடுமான்னு, நானே பலமுறை உங்கள மனசிலயே திட்டிருக்கேன். நாமளும், அதுமாதிரி தவறான வழியில போயிருந்தா, பொருள் கிடைச்சிருக்கும். ஆனால், ஊருக்குள்ள மதிப்பு, மரியாதைய இழந்து வெளிய தலைக்காட்ட முடியாம
நின்றிருப்போம்"
என்று சொல்லி, கண்ணனைக் கண்ணீருடன் கட்டித் தழுவிக்கொண்டாள்.
"நாம இருந்தாலும், இல்லைனாலும் நம்மள வச்சுத்தான் நம்ம குழந்தைகளை
இந்த சமூகம் மதிக்கும்.
ஆடம்பர பொருளுக்காக
நாம இதை செய்திருந்தா நம்ம குழந்தைகளுக்கு நீங்கா அவப்பெயரை தந்திருப்போம்" என்று கண்ணன்கூற தீபாவும் 'ஆமா' என்பதுபோல் தலையசைத்தாள்.
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே
வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
விளக்க உரை: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
Comments
Post a Comment